மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில், அனில் ரவிபுடி இயக்கத்தில் உருவாகியுள்ள "மன சங்கர வர பிரசாத் காரு" திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. ஜனவரி 12, 2026 அன்று வெளியாகி உள்ள இந்த ஆக்ஷன் நகைச்சுவை படம், 2 மணி நேரம் 44 நிமிடங்கள் ஓடக்கூடியது. சாகு கரபதி மற்றும் சுஷ்மிதா கோனிடேலா தயாரிப்பில், ஷைன் ஸ்கிரீன்ஸ் மற்றும் கோல்ட் பாக்ஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ் பேனரில் பீம்ஸ் செசிரோலியோ இசையமைத்துள்ளார்.
2023-ல் 'வால்டேர் வீரய்யா' மூலம் பிளாக்பஸ்டர் வெற்றியையும், 'போலா சங்கர்' மூலம் தோல்வியையும் சந்தித்த சிரஞ்சீவி, அதன்பிறகு 'விஸ்வம்பரா' என்ற சமூக ஃபேண்டஸி திரைப்படத்திலும், குடும்பப் பொழுதுபோக்கு படமான 'மன சங்கர வர பிரசாத் காரு' படத்திலும் நடித்தார். 'விஸ்வம்பரா' படத்திற்கான விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகள் கால தாமதமானதால், "மன சங்கர வர பிரசாத் காரு" படத்தை முதலில் வெளியிட படக்குழு முடிவு செய்தது.

பகவந்த் கேசரி படத்தை இயக்கிய இயக்குநர் அனில் ரவிபுடியின் விருப்பமான சங்கராந்தி சீசனை இந்தப் பட வெளியீட்டிற்கு தேர்ந்தெடுத்தனர். கடந்த ஜனவரியில் 'சங்கராந்திகி வஸ்துனம்' என்ற மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படத்தைக் கொடுத்த அனில் ரவிபுடியின் மீதான எதிர்பார்ப்புகள் மேலும் அதிகரித்தன. சிரஞ்சீவியுடன் அவர் இணைந்ததால், "மன சங்கர வர பிரசாத் காரு" படத்தின் மேல் மக்களின் எதிர்பார்ப்பு விண்ணைத்தொட்டது. அந்த படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
பிளாக்பஸ்டர் விமர்சனங்கள்: சிரஞ்சீவி, நயன்தாரா வெங்கடேஷ் கேமியோ என படம் மெகா பிளாக்பஸ்டர் ஆக மாறியுள்ளது. மூன்று சார்ட்பஸ்டர் பாடல்களால் போதுமான ஆர்வத்தை ஏற்படுத்திய பிறகு, இந்தத் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. மெகாஸ்டார் சிரஞ்சீவி தனது தனித்துவமான நகைச்சுவை உணர்வை மீண்டும் திரையில் கொண்டு வந்தாரா? அனில் ரவிபுடி தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்தாரா? இது சங்கராந்தி கொண்டாட்டத்திற்கு ஒரு சிறந்த படமாக அமையுமா? என்கிற சந்தேகங்களுக்கு குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப் படத்தை அனில் ரவிப்புடி மீண்டும் கொடுத்திருப்பதாக இந்த நெட்டிசன் விமர்சித்துள்ளார்.
என்ன கதை பாஸ்?: இந்தியாவின் பணக்காரர்களில் ஒருவரான சசிரேகா (நயன்தாரா), தேசிய பாதுகாப்பு ஏஜென்டும், நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவருமான சங்கர வர பிரசாத் (சிரஞ்சீவி) என்பவரை காதலிக்கிறார். தனது தந்தையின் (சச்சின் கெடேகர்) விருப்பத்துக்கு மாறாக அவரை திருமணம் செய்து கொள்கிறார். கோபமடைந்த சசிரேகாவின் தந்தை, காதலர்களுக்கு இடையே பிரச்சனைகளை உருவாக்கி, அவர்களை பிரித்து வைக்கிறார்.
சசிரேகா ஏன் சங்கர வர பிரசாத்திடமிருந்து பிரிய முடிவு செய்தார்? சசிரேகாவின் தந்தையை கொல்ல அடையாளம் தெரியாத கிரிமினல் கும்பல் ஏன் முயற்சி செய்தது? தனது குடும்பத்துடன் மீண்டும் இணைவதற்காக சங்கர வர பிரசாத் என்ன செய்தார்? வெங்கட் கௌடா யார்? சங்கர வர பிரசாத்துக்கும் வெங்கட் கௌடாவுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்பது இந்த படத்தின் கதை.
ஓவர் கிரிஞ்ச்: ஜாலியான காமெடி படமாக இந்த படம் உருவாகி இருந்தாலும், ஏகப்பட்ட கிரிஞ்ச் காட்சிகள் ரசிகர்களை கடுப்பாக்கி வருவதாகவும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். சிரஞ்சீவி படம் பிரபாஸின் தி ராஜாசாப் படத்துடன் போட்டியாக வெளியான நிலையில், பிரபாஸ் ரசிகர்கள் நெகட்டிவிட்டியை பரப்புவதாகவும் சர்ச்சைகள் வெடித்துள்ளன.