சென்னை: அகண்டா படத்தையே வெற்றிப் படமாக மாத்திட்டீங்களே இருங்க, உங்களுக்கு அதை விட பெரிய சம்பவத்தை பண்ணிக் காட்டுறேன் என வெறிகொண்டு இயக்குநர் போயபதி ஸ்ரீனு இயக்கியுள்ள படம் தான் அகண்டா 2.
நந்தமுரி பாலகிருஷ்ணா முதல் பாகத்தை போலவே இந்த படத்திலும் டபுள் ஆக்ஷனில் நடித்துள்ளார். ஆனால், இன்னொரு ஆக்ஷன் எதற்காக என்பதே பெரிய கேள்விக்குறியாகவும், முதல் படத்தை கனெக்ட் செய்ய மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களுக்கே சவால்விடும் வகையில், நம்ம ஊர் அகோரி சூப்பர் ஹீரோவாக இந்த படத்திலும் பாலகிருஷ்ணா, துப்பாக்கி புல்லட் முதல் ஏவுகணை என எது வந்தாலும் அசால்ட்டாக சமாளித்து சீனாவின் ராணுவத்தையே துவம்சம் செய்கிறார். இந்த அகண்டா 2 படத்தில் எதெல்லாம் நல்லா இருந்தது, எதெல்லாம் ரொம்பவே ஓவர் என்பது குறித்த விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
அகண்டா 2 கதை: அகண்டா படத்தில் அத்தனை பேரை வதம் செய்த பாலகிருஷ்ணாவை கைது செய்ய வேண்டும் என தேசிய பாதுகாப்புத் துறை அதிகாரி சொல்ல, முதல் பாகத்தில் அகண்டாவின் பராக்கிரமத்தை நேரில் பார்த்த அதிகாரி, அவர் கடவுளின் ரூபம் அவரை ஒன்றும் செய்ய முடியாது என்கிறார். அப்படியே அகண்டா பாலகிருஷ்ணா இமய மலையில், அஷ்டமா சித்திகளை கட்டுப்படுத்தும் கடுந்தவத்தில் இருக்கிறார். அதன் மூலம் துப்பாக்கி, ஆயுதங்கள் என அனைத்தையும் கட்டுப்படுத்த முடியும் என்கிற பில்டப்பை முன்னாடியே சொல்லி, அதன் பின்னர், அகண்டா தாண்டவம் ஆடும் போது லாஜிக் கேள்விகளை எல்லாம் பாலய்யா படத்தை பார்க்க வந்துவிட்டு கேட்காதீங்க என இயக்குநர் தெளிவாகவே சொல்லி விடுகிறார்.

இந்திய ராணுவ வீரர்களால் தனது மகன் கொல்லப்பட்ட கோபத்தில் சீனாவின் ராணுவ அதிகாரி ரகசியமாக பயோ வார் நடத்தும் முயற்சியை மேற்கொள்ள இந்தியாவை சேர்ந்த அமைச்சரான (கபிர்சிங் துஹான்) அவருக்கு உதவும் நோக்கில் மகா கும்பமேளாவில் கோடிக்கணக்கான பக்தர்கள் நீராடும் போது வைரஸை கலந்து விட ஏகப்பட்ட மக்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர்.
அவர்களை காக்கும் மருந்தை பாலமுரளி கிருஷ்ணாவின் (இன்னொரு பாலகிருஷ்ணா) மகள் கண்டு பிடிக்கிறார். அவரை அழிக்க நினைக்கும் இடத்தில் அகண்டா தோன்றுகிறார். ஜனனியை (ஹர்ஷாலி மல்கோத்ரா) பாலகிருஷ்ணா காப்பாற்றினாரா? அவர் மூலமாக இந்திய மக்கள் காப்பாற்றப்பட்டார்களா? இல்லையா? என்பது தான் அகண்டா 2 படத்தின் கதை.

பிளஸ்: இமய மலை முதல் பல காட்சிகளை அப்படியே செட் போட்டு எடுத்துள்ளனர். கலை இயக்குநர், ஒளிப்பதிவாளர், விஷுவல் எஃபெக்ட்ஸ் என அனைத்து டிபார்ட்மெண்ட்களும் இயக்குநர் எழுதிய இந்த கதையை எந்த அளவுக்கு திரையில் கொண்டு வர முடியுமோ அந்த அளவுக்கு உழைத்துள்ளனர். முதல் பாகத்தை போல அகண்டா 2 படத்தையும் தனது பின்னணி இசை மூலமாக தமன் காப்பாற்ற முயற்சித்துள்ளார். பாலகிருஷ்ணா டபுள் ஆக்ஷனில் நடித்து மாஸ் காட்டியுள்ளார். அவருடைய அம்மா உயிரிழந்த போது அவருக்கு கொல்லி போடும் சீனெல்லாம் கூஸ்பம்ப்ஸ் தான்.
மைனஸ்: வாத்தி படத்தில் நடித்த சம்யுக்தா மேனன், ஆதி என பாலகிருஷ்ணாவை தவிர்த்து மற்ற கதாபாத்திரங்கள் எதுவும் ஸ்ட்ராங்காக உருவாக்கப்படவில்லை என்பது தான் படத்திற்கு பெரும் பலவீனமாக மாறியுள்ளது. பாலகிருஷ்ணா ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கிறேன் என ஓவர் தீனிப் போட்டுள்ளனர். இந்து மதத்தை வைத்து தொடர்ந்து சினிமா படங்கள் பெரிதாக கல்லா கட்டி வருவதை டார்கெட் செய்து அனுமான், சிவன் என ஏகப்பட்ட கடவுள்களை களமிறக்கி உள்ளனர். சில காட்சிகள் பிரமிப்பாக இருந்தாலும், முக்கியமான கதை மற்றும் அதற்கான திரைக்கதை அமைப்பு ரசிக்கும் படி இல்லை. அகண்டா முதல் பாகம் அளவுக்கு கூட அகண்டா 2 இல்லை என்பது தான் பெரிய மைனஸ்.