இதன் பொருள் என்ன?
மக்களவைத் தேர்தலும், அனைத்து மாநில சட்டமன்றத் தேர்தல்களும் ஒரே காலத்தில் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் மையக் கருத்து.
தற்போது இந்தியாவில் என்ன நடக்கிறது?
இப்போது இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் வேறு வேறு தேர்தல் காலம் உள்ளது.
எடுத்துக்காட்டு
- தமிழ்நாடு தேர்தல் ஒரு வருடம்
- கர்நாடகா தேர்தல் வேறு வருடம்
- மக்களவைத் தேர்தல் தனியாக
இதனால் இந்தியாவில் கிட்டத்தட்ட ஒவ்வொரு சில மாதங்களுக்கும் ஏதாவது ஒரு தேர்தல் நடந்து கொண்டே உள்ளது.
இதையே மாற்றி நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பெரிய தேர்தல் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம்.
ஒரே நாடு ஒரே தேர்தலின் நன்மைகள்
தேர்தல் செலவு மிக குறையும்
இந்தியாவில் தேர்தல் நடத்துவது மிகவும் செலவான வேலை.
- பாதுகாப்புப் படைகள்
- EVM இயந்திரங்கள்
- அரசு ஊழியர்கள்
- பரப்புரை செலவுகள்
இவை அனைத்தும் ஒவ்வொரு தேர்தலுக்கும் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன.
ஒரே நாடு ஒரே தேர்தல் நடந்தால் ₹7 லட்சம் கோடி சேமிக்க முடியும்.
1.6% GDP உயர வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளனர்.
அரசு தொடர்ந்து வேலை செய்ய முடியும்
தேர்தல் வந்தாலே:
- Model Code of Conduct அமலாகும்
- புதிய திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படும்
- அரசியல் பரப்புரை அதிகரிக்கும்
இதனால் ஆட்சியின் கவனம் வளர்ச்சியிலிருந்து தேர்தலுக்கு மாறிவிடும்.
ஒரே தேர்தல் முறையில் அரசு முழு 5 ஆண்டும் நிர்வாகத்தில் கவனம் செலுத்த முடியும், திட்டங்கள் வேகமாக செயல்படும்
பாதுகாப்பு மற்றும் நிர்வாக சுமை குறையும்
ஒவ்வொரு தேர்தலுக்கும்:
- லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள்
- பாதுகாப்புப் படைகள்
- ஆசிரியர்கள்
அனைவரும் தேர்தல் பணிக்குச் செல்ல வேண்டி வருகிறது.
இதனால்:
- பள்ளிகள் பாதிப்பு
- அரசு அலுவலகத் தாமதம்
- நிர்வாக சிக்கல்கள்
உண்டாகின்றன.
மிகப்பெரிய நன்மைகள்
தேர்தல் வருகிறது என்றால், அதை வைத்து மத்திய, மாநில அரசுகள், அரசியல் கட்சிகள் ஏற்படுத்தும் பிரச்சனைகள் அதிகம்.
எடுத்துக்காட்டுக்கு, இந்தியா முழுமைக்கான ஒரு திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு முயன்றால், ஒரு மாநிலத்தில் தேர்தல் வருகிறது என்றால், எதிர்க்கட்சிகள் இதை வைத்து அரசியல் செய்யலாம்.
எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யும் என்றோ அல்லது எதிர்ப்பு / ஆதரவுக்காக திட்டங்களை மத்திய அரசு தாமதப்படுத்தலாம்.
இவையெல்லாம் நாட்டின் வளர்ச்சியையும், செயல்பாடுகளையும் பாதிக்கும்.
எடுத்துக்காட்டு
Uniform Civil Code செயல்படுத்த நினைத்தால், ஒரு மாநிலத்தில் தேர்தல் என்றால், எதிர்க்கட்சிகள் இதை வைத்து அரசியல் செய்யும்.
எதிர்ப்பு வரும் என்று மத்திய அரசு திட்டத்தை ஒத்திப்போடும். இது போன்று பல திட்டங்கள் தாமதமாகும், செயல்படுத்த முடியாது.
எதிர்ப்புகள் மற்றும் சவால்கள்
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிராகவும் பல கருத்துகள் உள்ளன.
ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால் தேசிய அரசியல் அதிகமாகப் பேசப்பட்டு, தண்ணீர், விவசாயம், வேலைவாய்ப்பு போன்ற மாநிலப் பிரச்சினைகள் பின்னுக்குச் செல்லலாம் என்றும், மாநிலக் கட்சிகள் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இது மத்திய அரசின் தாக்கத்தை அதிகரித்து கூட்டாட்சி அமைப்பைப் பாதிக்கலாம் என்ற கவலையும் உள்ளது.
அதேபோல், ஓர் அரசு நடுவில் கவிழ்ந்தால் என்ன செய்வது என்பது பெரிய நடைமுறைச் சிக்கலாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் முன்பு இருந்ததா?
ஆம்.
1952 முதல் 1967 வரை இந்தியாவில் தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடந்தன. பின்னர் சில மாநில அரசுகள் முன்கூட்டியே கலைந்ததால் அந்த சுழற்சி உடைந்தது.
ஏராளமான மாநில அரசுகளை மத்திய காங் அரசு கலைத்ததால், இந்த முறை மாறி வருடம் முழுவதும் தேர்தல் என்பதாக மாறி விட்டது.
தற்போது என்ன நிலை?
மத்திய அரசு இதற்காக அரசியல் அமைப்புச் சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வந்துள்ளது. இது குறித்து நாடாளுமன்றக் குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது சாதாரணத் தேர்தல் மாற்றம் அல்ல.
இந்திய அரசியலின் செயல்முறையையே மாற்றக்கூடிய பெரிய சீர்திருத்த முயற்சி.
இத்திட்டம் வெற்றி பெற வேண்டுமெனில், ‘அரசியல் ஒற்றுமை + சட்டத் திருத்தம் + மாநிலங்களின் ஒப்புதல்’ இந்த மூன்றும் மிக முக்கியம்.
தனிப்பட்ட முறையில் இத்திட்டத்தை வரவேற்கிறேன்.
இம்முறை பலருக்கு வேலைப் பளுவை, மன உளைச்சலை, செலவை, எரிச்சலைக் குறைக்கும். இந்திய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
மாநில அரசுகள் எதிர்ப்பது அரசியலுக்காகவே அன்றி உண்மையான மாநில, மக்கள் அக்கறையில் அல்ல.