Last Updated:December 17, 2024 7:34 PM IST
10 Rs Biryani: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே முதியவர் ஒருவர் 10 ரூபாய்க்கு பிரியாணி, 5 ரூபாய்க்கு பரோட்டா என மலிவு விலையில் உணவு விற்பனை செய்து வருகிறார்.
10 Rs Biryani: என் கடையில் எல்லாமே மலிவு தான்... 10ரூபாய்க்கு பிரியாணி விற்கும் முதியவர்..
உங்களுக்கு பிடித்தமான உணவு எது என கேட்டால் பலருக்கும் சட்டென்று நினைவில் பிரியாணி வந்து போகும். பிரியாணி சாப்பிட வேண்டும் என்றால் எப்படியும் குறைந்து 150 ரூபாய் வேண்டும். அப்படி இருக்கையில் வெறும் 10 ரூபாய்க்கு பிரியாணி விற்பனை செய்து வருகிறார் முதியவர் ஒருவர். அதுவும் 25 ஆண்டுகளாக...
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் முத்துராமலிங்கபுரதத்தைச் சேர்ந்தவர் சுப்புராஜ். இவர் அப்பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக அப்பகுதியில் சிறிய உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். பார்க்க பழைய படங்களில் வரும் மண் மணம் மாறாத கடைகள் போல அதற்கேற்ற பாணியில் உள்ள அந்த கடையில் தேநீர் 5 ரூபாய், புரோட்டா 5 ரூபாய், இட்லி 5 ரூபாய் என எந்த உணவுப் பொருளுக்கும் 20 ரூபாய்க்கும் மேல் விலை இல்லை.
காலையில் இட்லி, பூரி தயார் செய்யப்பட்டு 5 ரூபாய்க்கு விற்று, மதியத்திற்கு 10 ரூபாய்க்கு பிரியாணி மற்றும் 5 ரூபாய்க்குப் புரோட்டா தயார் செய்து விற்று வருகிறார். விலை குறைவாக இருக்கும் காரணத்தால் மதிய நேரத்தில் வேலைக்குச் செல்வோர், பள்ளி மாணவர்களின் வரத்து அதிகம் உள்ள நிலையில், அவர்களுக்காகத் தான் உணவகம் நடத்தி வருவதாகத் தெரிவித்தார் சுப்பு ராஜ்.
இதையும் படிங்க: கரண்ட், கேஸ், செல்போன் எதுவும் இங்க கிடையாது... 21ஆம் நூற்றாண்டிலும் இந்தியாவில் இப்படியொரு கிராமமா...
தனது தந்தை காலத்தில் தொடங்கப்பட்ட இந்த உணவகத்தை அவரது காலத்திற்குப் பின் தான் எடுத்து நடத்த தொடங்கி தற்போது 25 ஆண்டுகள் ஓடி விட்டது. இந்த 25 ஆண்டுகளும் பொருட்கள் இதே விலையில் விற்கப்பட்டு வரும் நிலையில், பிரியாணி விலை ஆரம்பத்தில் 5 ரூபாய் என இருந்து தற்போது 10 ரூபாய்க்கு வந்துள்ளது.
வாரம் முழுவதும் வெஜிடபிள் பிரியாணி புதன் கிழமை ஒருநாள் மட்டும் கொஞ்சம் சிக்கன் சேர்த்து சிக்கன் பிரியாணி வைப்பேன் அதோட விலையும் 10 ரூபாய் தான் என்ற சுப்புராஜ். பெரிய அளவில் லாபமும் இல்லை நஷ்டமும் இல்லை. 10 ரூபாய்க்கு என்ன முடியுமோ அந்த அளவில் செய்து வருகிறேன். விலை குறைவாக இருக்க போய் தான் என்னைத் தேடி வருகிறார்கள். ஒரு 20 ரூபாய் எடுத்து வந்தால் பிரியாணியோ, புரோட்டாவோ வயிறு நிறைய சாப்பிட்டுப் போக முடியும் அது போதும் எனக்கு என்கிறார்.
காலை மற்றும் மதிய வேளையில் மட்டும் உணவகம் நடத்தி வரும் முதியவர் மதியத்திற்குப் பிறகு தன்னிடம் உள்ள கால்நடைகளைக் கவனிக்கச் சென்று விடுகிறார். உணவும் நன்றாக உள்ளது, விலையும் குறைவு என்பதாலே இந்த உணவகத்திற்கு அந்த பகுதியில் வரவேற்பு உள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Location :
Virudhunagar,Tamil Nadu
First Published :
December 17, 2024 7:34 PM IST
10 Rs Biryani: என் கடையில் எல்லாமே மலிவு தான்... 10ரூபாய்க்கு பிரியாணி விற்கும் முதியவர்...